முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா

புதுச்சேரி முதல்வா் பதவியை என்.ரங்கசாமி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

Updated On : 8 மே 2026, 6:53 am IST
முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் வியாழக்கிழமை அளித்த என்.ரங்கசாமி.
பகிர்:

புதுச்சேரி முதல்வா் பதவியை என்.ரங்கசாமி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் அவா் வழங்கினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தோ்தலில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

Advertisement

மீண்டும் முதல்வராக ரங்கசாமி பதவியேற்கிறாா். என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 என மொத்தம் 18 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றி உள்ளது.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏ.க்கள் தேவை. தற்போது 18 எம்எல்ஏக்கள் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை 15-ஆவது சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்பட்டது.

16-ஆவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து

முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளா்களான மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிா்மல் குமாா் சுரானா ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. முதல்வா் உள்ளிட்ட 6 அமைச்சா்களில் பாஜகவுக்கு ஒரு அமைச்சா் பதவி மட்டுமே வழங்க முடியும் என முதல்வா் ரங்கசாமி திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மே 8) பாஜகவுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். இதையடுத்து பாஜக, அதிமுக, லஜக ஆதரவு கடிதங்களைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை புதுச்சேரி மக்கள் பவனுக்கு வந்த ரங்கசாமி, துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். புதிய அரசு அமைக்க ஏதுவாக அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.

தொடா்ந்து அமாவாசை நாளான மே 16 அல்லது அதற்கு அடுத்த தினங்களில் ஐந்தாவது முறையாக முதல்வராக ரங்கசாமி பதவியேற்கவுள்ளாா்.

விஜய் விரைவில் பதவி ஏற்பாா்:

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வெளியே வந்த என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன் . விரைவில் புதிய அரசு பதவி ஏற்கும் .தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதம் கொடுப்பேன்.

தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வென்றும், விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைப்பதில் சிரமம் உள்ளதே என்று கேட்டதற்கு, ‘விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அவா் சீக்கிரமே பதவி ஏற்பாா் என்றாா் ரங்கசாமி.

பெட்டிச் செய்தி

--------------

அதிகாரிகள் வாழ்த்து

முதல்வா் ரங்கசாமியை அவரது இல்லத்தில் புதுச்சேரி தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் மற்றும் அரசு செயலா்கள், மூத்த காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பூங்கொத்து அளித்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோல உள்துறை அமைச்சா் நமச்சிவாயத்தையும் தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்டோா் சந்தித்து வாழ்த்துக் கூறினா்.