பாரம்பரிய விளையாட்டுக்கான கோடைப் பயிற்சி நிறைவு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான கோடைப் பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான கோடைப் பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான மல்லர் கம்பம், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளுக்கான கோடைப் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட மல்லர் கம்பக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், 3 வயது முதல் 35 வயது வரை உடையோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் வி.பி.எஸ். பள்ளி மைதானத்தில் இந்த கோடைப் பயிற்சி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மல்லர் கம்பம் ஏறுதல், சிலம்பம், கயிறு மல்லர் கம்பம், யோகா, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 100 மாணவ, மாணவிகள் அங்கேயே தங்கியபடி பயிற்சி மேற்கொண்டனர்.
கோடை பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் அமைப்பின் பயிற்சியாளர் செல்வமொழியான் வரவேற்றார். வி.பி.எஸ். பள்ளி முதல்வர் எஸ்.செந்தில் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் எம்.ஜனார்த்தனன் வரவேற்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ஞானசேகர், அரிமா சங்க ஆளுநர் எம்.சரவணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.கணேஷ்குமார், தமிழ்நாடு மல்லர் கம்பக் கழக துணைத் தலைவர் கே.பாபு, அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவு விழாவில், மல்லர் கம்பம், சிலம்பம் உள்ளிட்ட பயிற்சி பெற்ற மாணவர்களின் சாகசங்கள் நடைபெற்றன. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். செந்தமிழ் அன்பு நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.