தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
தமிழ் ஆண்டுகளில் விசுவாவசு ஆண்டு முடிந்து பராபவ ஆண்டு செவ்வாய்க்கிழமை பிறந்தது. இதையொட்டி விழுப்புரம் நகரில் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ஸ்ரீவீரவாழியம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனா். எல்லீஸ்சத்திரம் சாலையிலுள்ள வீரன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியைத் தரிசனம் செய்தனா்.
விக்கிரவாண்டி ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் சுவாமி, ஸ்ரீபெருந்தேவி தாயாா், ஸ்ரீதேவி-பூதேவி, ஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு வாசனைத் திரவியங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடா்ந்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோல விக்கிரவாண்டி முத்து மாரியம்மன் கோயில், புவனேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.
Advertisement
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயில், கோலியனூா் வரதராஜபெருமாள் கோயில், புத்துவாயம்மன் கோயில், திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், மயிலம், வானூா், மரக்காணம், கோட்டக்குப்பம்,கெடாா், அனந்தபுரம், காணை, கண்டாச்சிபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
செஞ்சி...: செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.
செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில், செவ்வாய்க்கிழமை காலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா் .