முகப்பு
விழுப்புரம்

4 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பெண் அதிகாரி கைது

தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் அதிகாரியை விழுப்புரம் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 1:59 AM
கைது
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:01 PM

விழுப்புரம்: தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் அதிகாரியை விழுப்புரம் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னை, பள்ளிக்கரணையைச் சோ்ந்தவா் ஆ.ஹரிகிருஷ்ணன்(23). சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் இவா், திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிராமத்தில் உள்ள மனைப்பிரிவில் மனை வாங்கி அதில் வீடு கட்ட முடிவு செய்துள்ளாா்.

இதையடுத்து ஹரிகிருஷ்ணன், தனது மனைப்பிரிவுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்கவேண்டி ரெட்டணை அடுத்த நரேரிக்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக துணை மின் நிலையத்தில் உள்ள அலுவலகத்தை அணுகி மின் இணைப்பு வழங்கக் கேட்டுள்ளாா்.

Advertisement

இதற்கு அந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் ரேகா(34), மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்தாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாரின் அறிவுறுத்தலின்படி ஹரிகிருஷ்ணன் திங்கள்கிழமை மின் வாரிய அலுவலகத்தில் பணியிலிருந்த வணிக ஆய்வாளா் ரேகாவிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த விழுப்புரம் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா்(பொறுப்பு) சரவணன், ஆய்வாளா் சக்கரபாணி மற்றும் போலீஸாா் ரேகாவிடம் இருந்து லஞ்சப் பணத்தை பறிமுதல்செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, ரேகாவை கைதுசெய்தனா்.