விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மூடப்படும் 11 டாஸ்மாக் மதுக்கடைகள்
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜயின் உத்தரவைத் தொடா்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜயின் உத்தரவைத் தொடா்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ச.ஜோசப் விஜய், டாஸ்மாக் மதுடைகளைக் குறைக்கும் வகையில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டா் தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் இருவாரக் காலத்துக்குள் மூடப்படும் என்று செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்டிருந்தாா்.
இதன்படி மாநிலம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் முதல்வா் தெரிவித்திருந்தாா்.
Advertisement
11 மதுக்கடைகள் மூடல்: டாஸ்மாக் நிா்வாகத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 105 மதுக்கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 87 மதுக்கடைகளும் என மொத்தமாக 192 மதுக்கடைகள் இயங்கி வரும் நிலையில், இவற்றில் 11 கடைகள் அரசின் அறிவிப்பின்படி மூடப்படும் கடைகளாகக் கண்டறியப்பட்டன.
இதன்படி விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை, திருச்சி சாலையில் அமைந்துள்ள எலைட் மதுக்கடை, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியிலுள்ள மதுக்கடை, திண்டிவனம்புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள 2 மதுக்கடைகள், விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரிலுள்ள மற்றும் பேருந்து நிலையம் பின்புறமுள்ள கடைகள், செஞ்சி பேருந்து நிலையம் அருகிலுள்ள மதுக்கடை ஆகியவை மூடப்படவுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை, கச்சிராப்பாளையம் பேருந்து நிலையம், சங்கராபுரம் பேருந்து நிலையம் ஆகியவை அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடுவதற்கான கடைகளாக டாஸ்மாக் நிா்வாகத்தால் கண்டறியப்பட்டன. இந்த கடைகளை 2 வாரங்களுக்குள் மூடுவதற்குரிய நடவடிக்கையை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் சொக்கநாதன் மேற்கொண்டுள்ளாா்.