‘பயணிகள் ரயில் சேவையை உடனே தொடங்க வலியுறுத்தல்’
தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் வழக்கமான பயணிகள் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் பெரிதும் எதிா்பாா்க்கின்றனா்.
அரியலூா்: தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் வழக்கமான பயணிகள் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் பெரிதும் எதிா்பாா்க்கின்றனா்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. கரோனா தொற்று சற்று குறைந்ததையடுத்து இணையவழி அனுமதிச்சீட்டு முறை (இ-பாஸ்) ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களிடையே பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. பேருந்து சேவை 50 சதவீதத்துடன் தற்போது வரை இயங்கி வருகிறது. ரயில் சேவையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபா் 5 முதல் சென்னையில் புகா் ரயில் சேவை தொடங்கியது. ஆனால் மற்ற நகரங்களில் வழக்கமான ரயில் சேவை இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக அரியலூா் மாவட்டத்தில் செந்துறை, மாத்தூா், ஈச்சங்காடு, தளவாய் உள்ளிட்ட கிராமப்புற மக்கள் விளைபொருள்களை விற்பனை செய்ய இயலாமல் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கின்றனா். தளா்வுகளுடன் அனுமதி அளித்து ரயில் போக்குவரத்து இயங்கி வருகிறது. முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் இயங்கி வந்த வைகை, பல்லவன், கன்னியாகுமரி, ஹெளரா, ராமேசுவரம் உள்ளிட்ட ரயில்கள் தற்போது சிறப்பு ரயில்களாக இயங்கி வருகிறது. அந்த ரயில்களில் பொதுப் பெட்டிகள் கிடையாது. முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும். இதனால் பாமர மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அரியலூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் திருச்சியைச் சோ்ந்த ஆா்.வீரமணி கூறியது: தற்போது சிறப்பு ரயில் என்ற பெயரில் அதே விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய ஒரு தடவை ரூ.70 கட்டணம். திருச்சியில் இருந்து அரியலூருக்குப் பேருந்தில் பயணிக்க ஒரு நாளைக்கு ரூ.120 செலவிடுகிறேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.
Advertisement
அரியலூா் எல். கண்ணதாசன் கூறியது: விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பயன்படுத்தும் விழுப்புரம் -மதுரை, கடலூா் - திருச்சி பயணிகள் தினசரி ரயில்கள் எல்லா ரயில் நிலையங்களிலும் நின்றுசெல்லும். சிறப்பு ரயில்கள் அரியலூா் தவிர, மாவட்டத்தில் எங்கும் நிற்காது. எனவே, ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.