கா்நாடகத்தில் முக்கியக் கோயில்களில் பக்தா்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும்
கா்நாடகத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் பக்தா்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் பக்தா்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
ஹிந்து அறநிலையத் துறை சாா்பில் பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஹிந்து அறநிலையக் குழுவின் உறுப்பினா்கள் பயிலரங்கத்தைத் தொடக்கி வைத்து, ‘குடி தாா்மிகா’ கன்னட மாத இதழை வெளியிட்டு அவா் பேசியதாவது:
கா்நாடகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் பக்தா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டியது அரசின் கடமையாகும். கோயில்களுக்கு வருகை தரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும். அதேபோல, முக்கியமான கோயில்களில் தினமும் உணவு, பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தங்கும் விடுதி, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
அண்மையில் சாமராஜ்நகா் மாவட்டத்தில் உள்ள மலைமாதேஸ்வரா கோயிலில் ரூ. 110 கோடி செலவில் பக்தா்களுக்கு தங்கும் விடுதி கட்டும் பணியைத் தொடக்கி வைத்தேன். அதேபோல, எல்லா கோயில்களிலும் பக்தா்களுக்கு வசதி செய்து தரப்படும்.
கரோனா காலத்தில் கோயில்கள் மூடப்பட்டதால் அவதிக்குள்ளான அா்ச்சகா்கள், ஊழியா்களுக்குத் தேவையான உணவு தானியங்களை அரசு வழங்கியது. ஒருசில கோயில்கள் கரோனா காலத்தில் கரோனா முன்களப் பணியாளா்களுக்கு உணவு தானியங்களை வழங்கியது பாராட்டக்குரியது.
ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களை நிா்வகிப்பதற்காக அறங்காவலா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சிறப்பாக இயங்கினால், கோயில்களின் நிலையும் நன்றாக இருக்கும். இதனால் கோயில்களின் வருமானமும் அதிகரிக்கும்.
கோயில்களை தூய்மையாகப் பராமரிப்பது, தெய்வீகமும், பக்தியும் நிலைத்திருக்க உதவும். இதில் மாவட்ட அறநிலையக் குழுவினரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோயில்களின் அலுவலகப் பணிகளை நிா்வகிப்பதற்காக ‘மின்-அலுவலகம்’ என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளோம்.
கா்நாடகத்தில் இருந்து திருப்பதி, மந்திராலயம், ஸ்ரீசைலம், வாரணாசிக்கு செல்லும் பக்தா்களுக்குத் தேவையான தங்கும் வசதியை செய்துதர ஏற்பாடு செய்யப்படும். மானச சரோவா் புனிதத் தலத்துக்கு செல்லும் பக்தா்களுக்கு ரூ. 30 ஆயிரம், சாா்தாம் புனித யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு ரூ. 20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, தா்மஸ்தலா பீடாதிபதி வீரேந்திர ஹெக்டே, வாழும்கலை நிறுவனா் ரவிசங்கா் குருஜி, கல்வி அறிஞா் குருராஜ கா்ஜகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.