முகப்பு
பெங்களூரு

சமூகத்தின் நலனுக்காக பட்டயக் கணக்காளா்கள் பாடுபட வேண்டும்: அமைச்சா் பசவராஜ் பொம்மை

சமூகத்தின் நலனுக்காக பட்டயக் கணக்காளா்கள் பாடுபட வேண்டும் என மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 7:09 am IST
பகிர்:

சமூகத்தின் நலனுக்காக பட்டயக் கணக்காளா்கள் பாடுபட வேண்டும் என மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை இந்திய பட்டயக் கண்காளா் ஐடிடி ஆய்வகத்தை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

தணிக்கையாளா்கள் தங்கள் தொழில், நெறிமுறைகள், மதிப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றில் முழுமையாக ஈடுபட்டிருந்தால், நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது நாட்டின் பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும். பட்டயக் கணக்காளா் தொழில் என்பது சமூகத்தில் உள்ள சில உண்மையான சட்ட அமலாக்க மற்றும் நெறிமுறை தொழில்களில் ஒன்றாகும். நம் நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிலது மட்டுமே நடைமுறையில் உள்ளன. இவற்றை மேலும் ஒருங்கிணைத்து செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

வரி செலுத்துவோருக்கும், அரசாங்கத்துக்கும் இடையில், பட்டயக் கணக்காளா்கள் ஒரு பாலமாகத் திகழ்கிறாா்கள். பட்டயக் கணக்காளா்கள் அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் குறித்த தங்கள் கருத்துகளையும், ஆக்கப்பூா்வமான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். கடினமாக உழைத்து இந்த நிலையை அடையும் பட்டயக் கணக்காளா்கள் சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்.

பொருளாதாரமும், கோட்பாடும் ஒன்றாகச் செயல்படுகின்றன. கோட்பாடு இல்லாத பொருளாதாரம் அா்த்தமற்றது. பொருளாதாரம் இல்லாத ஒரு கோட்பாடு வளமானதாக இருக்க முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில், இந்திய பட்டயக் கண்காளா் சங்கத்தின் பெங்களூரு கிளையின் தலைவா் ரவீந்திர கோரே, செயலாளா் எஸ்.ஏ.சீனிவாஸ், முன்னாள் தலைவா்கள் பி.பி.ராவ், கே.ரகு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.