"எஸ்.யு.வி. ரக கார்களுக்கான வரியை வாபஸ் பெற வேண்டும்'
எஸ்.யு.வி. ரகக் கார்களுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் உற்பத்தி வரியை வாபஸ் பெற வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல்
எஸ்.யு.வி. ரகக் கார்களுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் உற்பத்தி வரியை வாபஸ் பெற வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வெஹிகிள் என்கிற எஸ்.யு.வி. ரகக் கார்கள் சாலைகளிலும் நிறுத்தும் இடங்களிலும் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. எனவே இவற்றுக்கு அதிக வரி விதிப்பு தேவை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இவற்றுக்கான உற்பத்தி வரி 27 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார். ஆயினும் டாக்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.யு.வி.க்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது என கூறியிருந்தார்.
இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து மஹிந்திரா&மஹிந்திராவின் ஆட்டோமோடிவ் பிரிவுத் தலைவர் பவன் கோயங்கா கூறியது:
Advertisement
தற்போது இந்திய சந்தையில் எஸ்.யு.வி. ரக கார்கள்தான் வேகமாக விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், நிதி அமைச்சரின் அறிவிப்பு இந்த ரக கார்களின் விற்பனையை கடுமையாக பாதிக்கும். ஒரே விலையுள்ள இரு எஸ்.யு.வி. கார்களை வாங்கும்போது ஒன்றுக்கு கூடுதல் உற்பத்தி வரியும் மற்றொன்றுக்கு குறைவாகவும் செலுத்த வேண்டிய குழப்பமான நிலை உருவாகும். இந்த கூடுதல் வரியை வாபஸ் பெற வேண்டும். பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சரை வலியுறுத்துவது என சங்கம் ஏகமனதாக முடிவு செய்துள்ளது என்றார்.