பங்குச் சந்தையில் 37 புள்ளிகள் சரிவு
பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று 37 புள்ளிகள் சரிந்தன. இதனால்
பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று 37 புள்ளிகள் சரிந்தன. இதனால் குறியீட்டெண் 19,646 புள்ளிகளானது. கடந்த வாரத்தில் 805 புள்ளிகள் வரை முன்னேற்றம் அடைந்த பங்குச் சந்தை, அதே நிலையைத் தொடரத் தவறியது.
அடுத்த வாரம் ரிசர்வ் வங்கி தனது காலாண்டு கடன் கொள்கையை அறிவிக்க உள்ளது. இதில் கடனுக்கான வட்டிக் குறைப்பு நடவடிக்கை இருக்காது என முதலீட்டாளர்கள் கருதியதே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாக பிப்ரவரியில் ஏற்றம் பெற்றிருந்தபோதிலும் அது பங்குச் சந்தையை ஊக்குவிக்கப் போதுமானதாக அமையவில்லை. தேசிய பங்குச் சந்தையில் 4 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 5,942 புள்ளிகளாக இருந்தது. முக்கியமான 30 முன்னணி பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஜிண்டால் ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்தம் 1,474 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,395 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 1,907 கோடியாகும்.