அனைத்து அரசு தகவல்களையும் டிஜிட்டல் மயமாக்க ரூ.1 லட்சம் கோடி
அனைத்து அரசுத் துறைகளில் உள்ள தகவல்களையும் ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்க ரூ. 1 லட்சம் கோடி
அனைத்து அரசுத் துறைகளில் உள்ள தகவல்களையும் ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்க ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் செலவிடப்படுகிறது என்று தேசிய நூதன முயற்சிகள் கவுன்சில் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருக்கிறார்.
புது தில்லியில் ஆய்வரங்கு ஒன்றில் பேசிய அவர் தெரிவித்தது: மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து தகவல்களையும் டிஜிட்டல் மயமாக்குவது மிகவும் அவசியம். அப்போதுதான் இந்தியாவின் ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் அந்த தகவல்களை ஒருவர் சுலபமாகப் பெற இயலும். நான்கு பெரும் டிஜிட்டல் தகவல் மையங்களை அரசு அமைக்க இருக்கிறது. பத்தாயிரம் சாப்ட்வேர் தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தப் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளனர். இதற்கான நெட்வர்க், அப்ளிகேஷன், தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகியவற்றின் மதிப்பைக் கணக்கிட்டால், அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது.
இந்தப் பணி பூர்த்தி அடையும்போது ஒவ்வொரு பஞ்சாயத்து அளவில் தகவல் பரிமாற்றம் எளிதாக மாறும். இப்போது அமைக்கப்பட்டு வரும் பெரும் தகவல் மையங்கள் தேசிய அளவில் செயல்படும். மாநில அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்துக்கென டிஜிட்டல் தகவல் மையம் செயல்படும்.
Advertisement
இப்போது நடைபெற்றுவரும் பணி நமது அரசு அமைப்புக்கே புதிய வடிவம் தரும். தகவல் பரிமாற்றத்தில் எல்லைகள் எதுவும் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க முயன்று வருகிறோம் என்று அவர் கூறினார்.