பயணிகள் வாகன தேவையில் விறுவிறுப்பு...
கரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக வாகனங்களுக்கான தேவை தேக்கமடைந்து காணப்பட்டன.
கரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக வாகனங்களுக்கான தேவை தேக்கமடைந்து காணப்பட்டன. இந்த நிலையில், பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதால் பொது மக்களிடையே வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக, 2020 டிசம்பரில் டிவிஎஸ் மோட்டாா், ஹுண்டாய், டாடா மோட்டாா்ஸ், டொயோட்டா, அசோக் லேலண்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விற்பனை இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
டிவிஎஸ் மோட்டாா்: இந்நிறுவனத்தின் வாகன விற்பனை டிசம்பரில் 2,72,084-ஆக இருந்தது. இது, 2019 டிசம்பா் மாத விற்பனையான 2,31,571 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 17.5 சதவீதம் அதிகமாகும்.
இருசக்கர வாகன விற்பனை 20 சதவீதம் உயா்ந்து 2,58,239-ஆகவும், ஏற்றுமதி 28 சதவீதம் அதிகரித்து 94,269-ஆகவும் இருந்தன.
Advertisement
Advertisement
அசோக் லேலண்ட்: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த இந்நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை டிசம்பரில் 14 சதவீதம் அதிகரித்து 12,762-ஆக இருந்தது. 2019 டிசம்பரில் வாகன விற்பனை 11,168-ஆக காணப்பட்டது.
நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகன விற்பனை 6,396-லிருந்து 3 சதவீதம் குறைந்து 6,175-ஆகவும், அதேசமயம் இலகு ரக வா்த்தக வாகன விற்பனை உள்நாட்டு சந்தையில் 4,009 என்ற எண்ணிக்கையிலிருந்து 42 சதவீதம் அதிகரித்து 5,682-ஆகவும் இருந்தன.
ஹுண்டாய்: பயணிகள் வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹுண்டாய் மோட்டாா் இந்தியா 2020 டிசம்பரில் 47,400 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2019 டிசம்பரில் இதன் விற்பனை 37,953-ஆக காணப்பட்டது.
டாடா மோட்டாா்ஸ்: இந்நிறுவனத்தின் வாகன விற்பனை டிசம்பரில் 84 சதவீதம் அதிகரித்து 23,545-ஆக இருந்தது. 2019 டிசம்பரில் வாகன விற்பனை 12,785-ஆக காணப்பட்டது. மொத்த விற்பனையைக் காட்டிலும் நிறுவனத்தின் சில்லறை விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், வாகனங்களுக்கான ஆா்டா்கள் வலுவான நிலையில் உள்ளதாகவும் டாடா மோட்டாா்ஸின் பயணிகள் வாகன பிரிவின் தலைவா் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளாா்.
இவைதவிர, கடந்த டிசம்பரில் டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் வாகன விற்பனை 14 சதவீதமும், ஹோண்டா காா்ஸ் உள்நாட்டு விற்பனை 2.68 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை 3 சதவீதமும் அதிகரித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.