தொழுத கையுள்ளும்
திருவள்ளுவர், குமரகுருபரர், காளமேகப் புலவர், மகாகவி பாரதியார் உள்ளிட்ட சிலரின் தனித்த சிறப்புகளை விளக்குவதாக சில கட்டுரைகள் அமைந்துள்ளன.
தொழுத கையுள்ளும் - முனைவர் கி. சிவா; பக். 150; ரூ. 200; சந்தியா பதிப்பகம், சென்னை-600 083, ✆ 044- 2489 6979.
தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.
(குறள் 828) என்று 'கூடா நட்பு' அதிகாரத்தில் அரசனுக்கு அறிவுறுத்தும் வள்ளுவர், பகைவரின் தொழும் கையிலும் கொலைக்கருவி இருக்கலாம், அழுத கண்ணீரும் அத்தகையதே என்றுரைக்கிறார். திருத்தக்கதேவரிடத்தும் இந்தத் தாக்கம் இருப்பதை எடுத்துரைக்கிறார். இதையே நூலுக்குத் தலைப்பாக்கி, மொத்தம் 35 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
திருப்பாவைக்கு மூலக்கூறான புறப்பாட்டு, கோதையின் பாதை, நோன்பும் எழுவகைப் பயன்களும், மழையின் தாக்கமும் இலக்கிய ஆக்கமும், புறப்பாட்டில் குடைந்தாடிய கோதை, மலர்க் கடந்தானும் ஆழிமழைக் கண்ணனும், கன்றுகளுக்கு இரங்கும் கார் எருமைகள் ஆகிய கவி கொஞ்சும் தலைப்புகளைப் போலவே கட்டுரைகளும் பாடல்களுடன் படிக்க ஈர்க்கின்றன.
ஆண்டாளின் பாடல்களில் செவ்விலக்கிய நூல்களின் தாக்கம் காணப்படுவதாக கூறும் நூல் ஆசிரியர், அவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 'மழையின் தாக்கமும் இலக்கிய ஆக்கமும்' என்ற கட்டுரை, ஐந்திணை ஐம்பது தொடங்கி, திருப்பாவை, திருவெம்பாவை, பாரதிதாசனின் பாண்டியன் பரிசு காப்பியம், கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காப்பியம் உள்ளிட்டவை சிந்தனைகளை தொகுத்து தருவதாய் உள்ளது.
அண்ணாமலைச் சதகம், அத்தாலந்தீர்த்தான் மஞ்சரி, குமரேச சதகம், பழனிப்பாவை, செழியதரையன் நன்னெறி, சேலம் கைலாசநாதர் சதகம், தனிச்செய்யுள் சிந்தாமணி, திருக்கோவிலூர்ப் புராணம், திருச்செந்தின்மாலை, நீதிபோத வெண்பா போன்ற அறியப்படாத நூல்களை எடுத்தாண்டுள்ளார்.
சங்க இலக்கியங்கள், அறநூல் இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் முதலியவற்றை ஒப்பிட்டும் சில கட்டுரைகள், இலக்கணம் சார்ந்து இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவர், குமரகுருபரர், காளமேகப் புலவர், மகாகவி பாரதியார் உள்ளிட்ட சிலரின் தனித்த சிறப்புகளை விளக்குவதாக சில கட்டுரைகள் அமைந்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.