உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்; மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடைபெற்றது
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மற்றும் மனிதச் சங்கிலிப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைப் போரில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
அந்த வகையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அதன் துணைத் தலைவர் ஆர்.முரளி, செயலாளர் எஸ்.அறிவழகன் மற்றும் பெண் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மனிதச் சங்கிலிப் போராட்டம்: இதற்கிடையே, தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று உயர் நீதிமன்றத்தை ஒட்டியுள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் வியாழக்கிழமை மதியம் வழக்குரைஞர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். இலங்கை அரசுக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக் காத்திட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், அச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டம் காரணமாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.