முகப்பு
சென்னை

துப்பாக்கி சூடு சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

சென்னை புதுப்பேட்டையில் துப்பாக்கி வெடித்து எஸ்.ஐ. காயமடைந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்ததாக மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 3:17 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

சென்னை புதுப்பேட்டையில் துப்பாக்கி வெடித்து எஸ்.ஐ. காயமடைந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்ததாக மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கடலூரைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன். இவர் சென்னையில் நடைபெற உள்ள காவலர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ளார். சென்னைப் பெருநகர காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் தனது நண்பர் ஆனந்தகுமாருடன், புதுப்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்த அறையில் துப்பாக்கியால் சுடும் சத்தமும், அதைத்தொடர்ந்து இளமாறனின் அலறல் சத்தமும் கேட்டுள்ளது. விடுதி ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு இடதுகாலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அலறிக் கொண்டிருந்த இளமாறனை அவர்கள் மீட்டு, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனந்தகுமார் துப்பாக்கியை கழற்றி மேஜையில் வைக்கும்போது, துப்பாக்கியின் டிரிக்கரில் தவறுதலாக கைப்பட்டு அதில் இருந்த குண்டு வெளியேறி இளமாறன் மீது பாய்ந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் கே.சங்கர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரிடம் விசாரணை செய்தார். சம்பவ இடத்திலும் விசாரணை செய்தார். இந்த விசாரணைக்கு பின்னர் எழும்பூர் போலீஸார் ஆனந்தகுமார் மீது விபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனர்

கவனக்குறைவாக செயல்பட்ட ஆனந்தகுமார் மீது விரைவில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.