அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும்: பாக். பிரதமர்!
அமெரிக்கா - ஈரான் இடையே ஜூன் 19 அன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வு பாகிஸ்தான் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளும் முடிவு இறுதியாகியுள்ளது. அமைதி ஒப்பந்தம் வருகிற ஜூன் 19 அன்று அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தான பிறகு, ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்து அமெரிக்காவின் ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் கூறுகையில், “இது இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மட்டுமல்ல. அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான வெற்றி. இது வரலாற்றுரீதியான மைல்கல்.
Advertisement
Advertisement
கடினமான சூழ்நிலையில் கூட இரு நாட்டுத் தலைவர்களும் பொறுமையையும். விவேகத்தையும் கடைபிடித்ததால் உலகமே கொண்டாடும் இப்படியான முடிவு நமக்குக் கிடைத்துள்ளது. இன்றைய நாள் பாகிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள பாகிஸ்தானியர்களுக்கும் பெருமைக்குரிய நாள்.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படும் பொருளாதார நன்மைகளை அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் நமது அரசு கொண்டு சேர்ப்போம் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியதில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிவித்த அவர், பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் சார்பில் முக்கிய உறுப்பினராக பங்காற்றிய அதிகாரி ஆசீம் மூனீரைப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வை பாகிஸ்தான் முன்னெடுத்து நடத்தும் என்றும், ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்நிகழ்வு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.