தீயணைப்பு லாரி மோதி பெண் சாவு
சென்னையில் தீயணைப்பு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சென்னையில் தீயணைப்பு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து போக்குவரத்து போலீஸார் தெரிவித்தது: திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (70). இவர் மதுரவாயல் பகுதியில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்தார். உறவினர் ஒருவரின் 5 வயது குழந்தை சபரிநாதன் என்பவரையும் அவர் உடன் அழைத்து வந்தார்.
இருவரையும் மருமகன் வெங்கடேசன் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது கீழ்ப்பாக்கம் கெங்குரெட்டி சாலை அருகில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த தீயணைப்பு வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த விபத்தில் காயமடைந்த 3 பேரும் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஜெயலட்சுமி உயிரிழந்தார். வெங்கடேசன் மற்றும் சபரிநாதன் ஆகியோருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு வாகனத்தின் ஓட்டுநர் சேகர் (53) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.