தமிழகத்தில் 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தின் பொதுத் துறை (சிறப்பு ஏ) வெளியிட்டுள்ள அறிவிக்கை விவரம்:
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 23 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. வகுப்புவாரி அடிப்படையில், இந்தப் பணியிடங்கள் 6 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பின்தங்கிய வகுப்பினருக்கு 6 (பெண்கள் 2), பொதுப் பிரிவுக்கு 8 (பெண்கள் 4), தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 3 (பெண்கள் 1), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சீர்மரபினர் 4 (பெண்கள் 1), தாழ்த்தப்பட்டோர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்) 1, பின்தங்கிய வகுப்பினர்-முஸ்லிம்கள் 1 (பெண்கள் 1) என்ற அடிப்படையில் 23 காலிப் பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நேரடி பணி நியமன முறையில் நிரப்பப்படும். தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிந்த காலத்தில் 48 வயதை எட்டியிருக்கக் கூடாது. தேர்வில் பங்கேற்க மூத்த வழக்குரைஞரிடம் இருந்து நற்சான்றை அளிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: http:www.tn.gov.indepartmentspublic.html
விண்ணப்பப் படிவத்துடன் சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மே 31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டிய முகவரி: முதன்மைச் செயலாளர், பொதுத் துறை (சிறப்பு ஏ), தலைமைச் செயலகம், சென்னை-600009. எழுத்துத் தேர்வு ஜூலை 6- ஆம் தேதி நடைபெறும். தேர்வு நடைபெறும் இடங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பத்துடன் ரூ.500-க்கான வரைவோலையை (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250) இணைக்க வேண்டும். Registrar General, High Court of Madras, payable at chennai என்ற பெயரில் வரைவோலையை எடுக்க வேண்டும் என்று தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.