ரூ.1.75 கோடி நிலம் அபகரிப்பு: ரயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது
சென்னையில் ரூ.1.75 கோடி நிலத்தை அபகரித்ததாக ரயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் ரூ.1.75 கோடி நிலத்தை அபகரித்ததாக ரயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சு.முரளி. ஜோதிடரான இவர் தனது சகோதரர் சுந்தரம், கணபதி ஆகியோருடன் அகரம், ஊரப்பாக்கம், திருவாலங்காடு ஆகிய இடங்களில் நிலம் வாங்கினார்.
Advertisement
இதில் சுந்தரத்தின் மனைவி பானுமதி எழும்பூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஊரப்பாக்கத்தில் உள்ள இடத்தை சுந்தரம், கணபதி ஆகிய இருவரும் முரளியின் கையெழுத்துப்போட்டு பொது அதிகாரப் பத்திரம் தயார் செய்து கடன் வாங்கினராம்.
திருவாலங்காடு இடத்தை சுந்தரம், கணபதி, பானுமதி ஆகிய 3 பேரும் சேர்ந்து போலி கையெழுத்துப் போட்டு பொது அதிகாரப் பத்திரம் தயார் செய்து விற்றனராம்.
இதேபோல அகரத்தில் உள்ள இடத்தையும் போலி ஆவணம் தயார் செய்து விற்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவின் நிலமோசடி தடுப்புப் பிரிவில் முரளி புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுந்தரம், கணபதி, பானுமதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மூன்று இடங்களிலும் அபகரிக்க முயன்ற நிலத்தின் மதிப்பு ரூ.1.75 கோடி இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மற்றொரு மோசடி வழக்கு: வேலூர் மாவட்டம் செய்யூரைச் சேர்ந்தவர் பா. ஜெயகுமார். இவர் டி.வி.லோகையா என்பவரிடமிருந்து போரூர் லட்சுமிநகரில் உள்ள ஒரு நிலத்துக்கான பொது அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அந்த நிலத்தை வளசரவாக்கத்தைச் சேர்ந்த து.கார்த்தீசன் (43), போரூரைச் சேர்ந்த த.ரகுபதி (46), அவர் மனைவி ஷீலா (37) ஆகிய 3 பேரும் லோகையா தங்களுக்கு பொதுஅதிகாரம் தந்ததுபோல ஆள்மாறாட்டம் மூலம் போலி ஆவணம் தயார் செய்து அபகரித்து இருப்பதும், அந்த நிலத்தை பலரிடம் விற்றதுபோல போலி ஆவணங்கள் தயார் செய்து இருப்பதும் ஜெயகுமாருக்கு அண்மையில் தெரியவந்ததாம்.
இது குறித்து நிலமோசடி தடுப்புப் பிரிவில் ஜெயகுமார் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்தீசன், ரகுபதி, ஷீலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அந்த நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.