"கடல் வர்த்தகமும், அன்னிய முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு'
உலக வர்த்தக, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆசிய பகுதியில் அதிகரித்து வருவதால் இந்தியா உள்ளிட்ட கீழ்திசை நாடுகளின் கடல் வர்த்தகமும், அன்னிய முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஜப்பான் தூதரக அதிகாரி மசொனோரி நகானோ கூறினார்.
உலக வர்த்தக, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆசிய பகுதியில் அதிகரித்து வருவதால் இந்தியா உள்ளிட்ட கீழ்திசை நாடுகளின் கடல் வர்த்தகமும், அன்னிய முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஜப்பான் தூதரக அதிகாரி மசொனோரி நகானோ கூறினார்.
சென்னையை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொழில்நுட்பக் கல்லூரியின் 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:
அண்மையில் இந்தியப் பிரதம்ர் மன்மோகன் சிங்கின் ஜப்பான் வருகை இரு நாடுகளின் வர்த்தக உறவில் முன்னேற்றத்தை உருவாக்கி இருப்பதுடன், ஜப்பான் முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
நாடுகளிடையே வணிகமும், வர்த்தக உறவும் அதிகரிக்கும்போது அனைத்து நாடுகளையும் இணைக்கும் பாலமாக கடல் வணிகம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதர நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வணிகத்தில் 90 சதவிகிதம் கடல் மூலம்தான் நடைபெற்று வருகிறது. உலகில் இன்று எந்த ஒரு நாடும் கடல் வணிகம் இல்லாமல் செயல்படமுடியாத நிலை உள்ளது.
எனவே கடல் வணிகம் மேற்கொள்ள உதவும் கப்பல்களின் சேவையும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கப்பல்களில் பணியாற்றுவதற்கான கல்வி,தொழில்நுட்பத்திறன் மற்றும் பயிற்சி பெற்று பட்டம் பெற்றுள்ள நீங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நட்புறவு மேம்படவும் பணியாற்ற வேண்டும் என்றார்.
விழாவில் 174 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ்,கேலைன் கப்பல் நிறுவன நிர்வாக அதிகாரி கோஜிஹிகாஷிஜிமா, துணைவேந்தர் கே.சேகர், அமெரிக்கன் டிஜிட்டல் பல்கலைக்கழக வேந்தர் அனுஷ் ராமச்சந்திரன், இணை துணைவேந்தர் கேப்டன் கே.விவேகானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.