ஓய்வூதியம் வழங்கக் கோரி திண்டிவனம் ராமமூர்த்தி வழக்கு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தனக்கு கிடைக்கவில்லை. அதை வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (80) வழக்குத் தொடர்ந்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தனக்கு கிடைக்கவில்லை. அதை வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (80) வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளேன். அதேபோல் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளேன். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் கடந்த 10.8.1998 முதல் எனக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எனக்கு ஓய்வூதியம் வரவில்லை. இதற்கான காரணமும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனுப்பிடுமாறு கோரி நாடாளுமன்றச் செயலகத்தின் ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட்டு கடந்த டிசம்பர் மாதம் முதல் எனக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்கிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
Advertisement
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக நாடாளுமன்ற செயலக கணக்கு அதிகாரி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.