ஆடுகளத்தில் கடும் வாக்குவாதம்; வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் என்ன பிரச்னை?
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று (ஜூன் 15) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சூப்பர் ஓவர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை வீரர் ககுதாஸ் மதுலன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பேசுபொருளானது.
Advertisement
Advertisement
சூப்பர் ஓவரில் இலங்கை அணி 16 ரன்கள் எடுக்க, இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இலங்கை வீரர் ககுதாஸ் மதுலன் வீசிய சூப்பர் ஓவரின் கடைசி மூன்று பந்துகளை சூர்யவன்ஷி எதிர்கொண்டார். கடைசி மூன்று பந்துகளில் அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் என்ன பிரச்னை?
சூப்பர் ஓவரில் போட்டியை வென்ற பிறகு இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். களத்தில் இருந்த சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் பெவிலியன் திரும்புகையில், இலங்கை வீரர் ககுதாஸ் மதுலன் சூர்யவன்ஷியை நோக்கி ஏதோ கூறுகிறார்.
இதனால், கோபமடைந்த வைபவ் சூர்யவன்ஷி அவரை நோக்கிச் சென்று அவரது நெஞ்சில் கை வைத்துத் தள்ளுகிறார். இதனையடுத்து, மதுலன் சூர்யவன்ஷியை நோக்கி வேகமாக வர வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதனால், வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் திரும்புகையில் மிகவும் கோபமாக இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கள நடுவர் வெறும் எச்சரிக்கை மட்டும் கொடுப்பாரா அல்லது இரண்டு வீரர்களின் மீதும் நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.