பாதுகாப்பு ஒத்திகை: கப்பலை கடத்திய கும்பலை பிடித்த போலீஸார்
"ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் சென்னையில் நடுக்கடலில் கப்பலை கடத்திய கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
"ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் சென்னையில் நடுக்கடலில் கப்பலை கடத்திய கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
இந்த பாதுகாப்பு ஒத்திகை 100 சதவீதம் வெற்றி பெற்றதாக தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
இது குறித்த விவரம்:
Advertisement
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகள் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் இரண்டு முறை "ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதில் வெடிகுண்டுடன் தீவிரவாதிகள் வேடத்தில் கடல் வழியாக ஊடுருவும் மத்திய போலீஸாரைக் கண்டறிந்து, மாநில போலீஸார் கைது செய்வார்கள். சில வேளைகளில் போலீஸார் கவனக்குறைவாக செயல்பட்டால், மாறுவேடத்தில் ஊடுருவும் போலீஸார், தங்களது திட்டப்படி குறிப்பிட்ட இடத்தில் வெடிகுண்டை வைத்துவிடுவார்கள்.
இந்த ஒத்திகையில், அரசின் பாதுகாப்பு துறைகள் மட்டுமன்றி கடல் சார்ந்த அனைத்து துறைகளும் ஈடுபடுகின்றன. இந்த பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதையொட்டி ரயில், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தனியார் மால்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சோதனைச் சாவடிகள் ஆகிய முக்கியமான பகுதிகளிலும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை 12 இடங்களில் வியாழக்கிழமை 52 போலீஸார், தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் வெடிகுண்டுடன் ஊடுருவ வைக்கப்பட்டனர். இவர்களில் 51 பேரை கண்டறிந்து அவர்களை கையும் களவுமாகப் போலீஸார் கைது செய்தனர். கடலூரில் ஒரு தேவாலயத்தில் ஊடுருவியவரை போலீஸார் கண்டறிந்து கைது செய்யவில்லை.
இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 68 பேர் தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவினர். இதில் 62 பேரை போலீஸார் தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து கைது செய்தனர். இவர்களில் கடலூரில் ஊடுருவிய 4 பேரை போலீஸாரால் கண்டறிந்து கைது செய்ய முடியவில்லை. இந்த ஒத்திகை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. சென்னையில் கூடுதல் ஆணையர் ராஜேஷ்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
கப்பல் கடத்தல்: சென்னை துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பலை தீவிரவாதிகளைப் போல் மாறுவேடத்தில் வந்த 9 பேர் கடத்தினர். அந்தக் கப்பலில் இருந்த 24 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். கடத்தியவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டனர். பின்னர், அந்த கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்து அந்த கப்பலைக் கடத்தியவர்களை கைது செய்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை சுமார் மூன்றரை மணிநேரம் நடைபெற்றது.
இந்த பாதுகாப்பு ஒத்திகை குறித்து கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியது:
இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக கடலோர பாதுகாப்பு படை, கடற்படை, கடலோர காவல்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸார், வனத்துறை, சுங்கத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்தப் பாதுகாப்பு ஒத்திகை 100 சதவீத வெற்றி பெற்றுள்ளது. இதில் கடற்படையின் விமானம், கப்பல், ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன என்றார்.