ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி: இதுவரை 18,175 குவிண்டால் விற்பனை
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 18 ஆயிரத்து 175 குவிண்டால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 18 ஆயிரத்து 175 குவிண்டால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உணவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அந்த்த துறையின் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியது:
தமிழகத்தில் 1.85 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மாதத்துக்கு சுமார் 3 லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த 1 கிலோ அரிசி ரூ.20-க்கு வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 274 சிறப்பு அங்காடிகள் மூலம் இன்றுவரை 18 ஆயிரத்து 175 குவிண்டால் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
தமிழகத்தின் பொது விநியோகத்திட்ட தேவைக்கென அரசு கையிருப்பில் 8 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், இந்திய உணவுக் கழக கிடங்குகளில் 6 லட்சத்து 91 ஆயிரம் மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளதால், 5 மாத அரிசி தேவைக்கு போதுமானது.
கண்காணிக்க வேண்டும்: காய்கறி விலை உயர்வினைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். பொது மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ள இத்திட்டம் சிறப்புடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் உணவுத் துறை அதிகாரிகள் அனைவரும் முனைப்புடன் கண்காணிக்க வேண்டும்.
ரேஷன் அட்டை புதுப்பிப்பு: கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைகளில் உள்தாள்கள் இணைத்து குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணி காலக்கெடு ஏதும் நிர்ணயம் செய்யாமல், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 1.94 கோடி ரேஷன் அட்டைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருள்களை பதுக்கி கடத்தும் சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருள் வழங்கல் துறை, வருவாய்த்துறை மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் அனைவரும் இரவு ரோந்து பணிகளை அதிகரித்து, வாகன சோதனைகளில் ஈடுபட்டு, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.
இதுவரை 410 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர் காமராஜ். இந்த ஆய்வுக் கூட்டத்தில் உணவுத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.