வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற 6 முக்கிய ஆய்வு முடிகள்!
கரோனாவுக்குப் பிந்தைய 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை எவ்வாறு இருந்துள்ளது என்பதை ஆய்வு செய்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..
2021-22 முதல் 2025-26 வரையிலான கரோனா காலத்திற்குப் பிந்தைய ஐந்து ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை எவ்வாறு இருந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவான ஆய்வின் பயனாக ஆறு முதன்மையான ஆய்வு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக, 01.04.2021 அன்று இருந்த மாநிலத்தின் நிலுவைக் கடன் அளவு 5.13 லட்சம் கோடி ரூபாயிலிருந்தது, 31.3.2026 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் தோராயமாக இரண்டு மடங்கு உயர்ந்து. 10 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இரண்டாவதாக, வட்டி செலுத்துதலுக்கான தொகை, மாநிலத்தின் மொத்த வருவாய் வரவினங்களில் தோராயமாக 23 சதவீதத்தையும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் தோராயமாக 35 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது.
2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி 67,050 கோடி ரூபாயாக உள்ள ஆண்டு வட்டிச் செலவினம், மாநிலத்தின் ஆண்டு மூலதனச் செலவினத்தை காட்டிலும் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது.
புதிய சொத்துக்களை உருவாக்குவதற்கு செலவிடுவதை விட, கடந்த காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே மாநில அரசு தற்போது அதிக அளவில் செலவு செய்து வருகிறது.
மூன்றாவதாக, வருவாய் பற்றாக்குறை, தற்போது ஒரு கட்டமைப்பு ரீதியிலானப் பிரச்சினையாக மாறிவிட்டது. கணக்குகளின்படி, மாநிலத்தின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிலையில் 78,324 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.2 சதவீதம் என்பதோடு, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பதிவான பற்றாக்குறையின் அளவைக் காட்டிலும் தொகையளவில் மிக அதிகமானதாகும்.
நான்காவதாக, மாநிலத்தின் சொந்த வரி வசூல் திறன் சரிவைச் சந்தித்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய்க்கும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கும் இடையிலான விகிதம், 2021-22 ஆம் ஆண்டில் 5.93 சதவீதமாக இருந்து, 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி தோராயமாக 5.45 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது, மாநில அளவில் கடந்த இரு தலைமுறைக்காலத்தை விட மிகக் குறைந்த சதவீதம் என்பதோடு, கரோனா பெருந்தொற்றிற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் ஒப்பீட்டு அளவுகோலாகக் கருதப்பட்ட ஏனைய இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவாகும்.
ஐந்தாவதாக, ஒட்டுமொத்த வருவாய் வரவினங்களில் பொறுப்பேற்றச் செலவினங்களின் சதவிதம், இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில் உள்ளது.
இது, மூலதனச் செலவினங்கள் மற்றும் புதிய முதலீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை பெருமளவு குறைத்து, மொத்தச் செலவினத்தில் மூலதனச் செலவினத்தின் விகிதம், 11.8 சதவீதமாக உள்ளது.
ஆறாவதாக, நிபந்தனைப் பொறுப்புகள், மாநிலத்தின் கடனின் உண்மையான நிலையை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தோராயமாக 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதோடு, மாநிலத்தின் நிதி நிர்வாகத்திற்குப் பெரும் நிதி அபாயத்தை ஏற்படுத்துகின்றன என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.