முகப்பு
சென்னை

ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக ஜி.சந்திரபாபு செயல்பட இடைக்காலத் தடை

தமிழ் நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக ஜி.சந்திரபாபு செயல்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Updated On : 22 ஜூன் 2013, 4:25 am IST
பகிர்:

தமிழ் நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக ஜி.சந்திரபாபு செயல்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது: தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி.சந்திரபாபு நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் பணி நியமனம் தொடர்பான பல்வேறு உண்மைகளை மறைத்து கவுன்சிலின் தலைவர் ரகசியமான முறையில் சந்திரபாபுவை பதிவாளராக நியமித்துள்ளார். விதிகளின்படி 60 வயதுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணியில் நீடிக்க முடியாது. ஆனால் சந்திரபாபு 60 வயதில் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்தப் பணி நியமனத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளிப்பது அவசியம். அவ்வாறு ஒப்புதல் அளித்த பிறகே பதிவாளர் தனது பணியைச் செய்ய முடியும். ஆனால் சந்திரபாபு பதிவாளராக நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், அவர் பதிவாளருக்கான பணிகளை செய்து வருகிறார். ஆகவே, அவரது பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீது நீதிபதி டி.ஹரிபரந்தாமன் விசாரணை மேற்கொண்டார். அப்போது சந்திரபாபுவின் பணி நியமனத்துக்கு இதுவரை மாநில அரசு ஒப்புதல் தரவில்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக சந்திரபாபு செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.