கோயில் பூசாரி கொலை
கெருகம்பாக்கத்தில் கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
கெருகம்பாக்கத்தில் கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
மாங்காடு அருகில் உள்ள கெருகம்பாக்கம் டாக்டர் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (34).
இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கமாம்.
Advertisement
Advertisement
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற ஹரிகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
அப்போது கெருகம்பாக்கம் மயானத்தில் உள்ள தகன மேடையில் கற்களால் மூடப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார் இறந்து கிடந்தது ஹரிகிருஷ்ணன் என்பதை உறுதிப்படுத்தினர். அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் கற்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
விசாரணையில், காணாமல் போன அன்று ஹரிகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் மது குடிக்கச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷிடம் போலீஸார் விசாரித்தனர்.
ஹரிகிருஷ்ணன் மது போதையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதன் காரணமாக கற்களால் அவரது தலையில் தாக்கி கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் ராஜேஷ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்தனர்.