முகப்பு
சென்னை

சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க நிலையத்தை எட்டியது 2-ஆவது டனல் போரிங் இயந்திரம்

சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தை 2-வது டனல் போரிங் இயந்திரம் எட்டியுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 4:56 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தை 2-வது டனல் போரிங் இயந்திரம் எட்டியுள்ளது.

இதற்கு முன்பு முதலாவது டனல் போரிங் இயந்திரம் கடந்த ஜூன் மாதம் சைதாப்பேட்டை சுரங்க ரயில் நிலையத்தை எட்டியது. இதனையடுத்து இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.

சென்னையில் பல்வேறு இடங்களில் சுரங்கத்தில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளும், சுரங்க வழிப்பாதை பணிகளும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

இதில் சைதாப்பேட்டையில்தான் மெட்ரோ ரயில் நிலையத்தை டனல் போரிங் இயந்திரம் முதல்முறையாகச் சென்றடைந்து. சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை வழியாகச் செல்கிறது. சைதாப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை ஜெமினி வரையில் டனல் போரிங் இயந்திரம் மூலம் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் 2012 இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சைதாப்பேட்டை முதல் ஜெமினி வரையில் இரண்டு வழிகளிலும் டனல் போரிங் இயந்திரம் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இரண்டு வழிப்பாதை அமைக்கும் பணிகளில் டனல் போரிங் இயந்திரம் 100 மீட்டர் இடைவெளியில் இயக்கப்படும். அதன்படி முதலாவது டனல் போரிங் இயந்திரம் ஜூன் மாதத்திலும், 2-வது டனல் போரிங் இயந்திரம் ஜூலை மாத இறுதியிலும் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தை எட்டியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், 24 கிலோ மீட்டர் தொலைவு சுரங்க வழியில் ரயில் பாதை அமைகிறது. வண்ணாரப்பேட்டை முதல் திரிசூலம் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சுரங்கப் பாதையிலும், சைதாப்பேட்டை முதல் விமான நிலையம் வரை மேம்பாலம் வழியாகவும் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்க ரயில் பாதைகள் அமைப்பதற்கு, சீனா மற்றும் ஜெர்மனியில் இருந்து 12 டனல் போரிங் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்பது இயந்திரங்கள் சீனாவில் இருந்தும், 3 இயந்திரங்கள் ஜெர்மனியில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.

சுரங்கப் பணிகள்: இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து எழும்பூர் வரையிலான 2 வழித்தடத்திலும், மே தின பூங்காவில் இருந்து சென்ட்ரல் மற்றும் ஜெமினி வரையிலும், சைதாப்பேட்டையில் முதல் ஜெமினி வரையிலும், நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் மற்றும் ஷெனாய் நகர் வரையிலும், ஷெனாய் நகர் முதல் திருமங்கலம் வரை பாதையிலும் டனல் போரிங் இயந்திரங்கள் மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சுரங்கம் அமைக்கும் பணிகள் 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.