ஆசிட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஆசிட் விற்பனை செய்யும் வியாபாரிகள், அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
ஆசிட் விற்பனை செய்யும் வியாபாரிகள், அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் உள்ள ஆசிட் மொத்த விற்பனையாளர்கள் 27 பேர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பெருநகர காவல் துறையின் கூடுதல் ஆணையர் வி.ஏ.ரவிகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நைட்ரிக் ஆசிட், சல்பியூரிக் ஆசிட், ஹைட்ரோகுளோரிக் ஆசிட் போன்ற ஆபத்தான ஆசிட்களை அரசின் விற்பனை உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும், ஆசிட் விற்பனை செய்யும்போது தனியாக ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும், அதில் வாங்கியவரின் பெயர், செல்போன், ஆசிட் அளவு போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
ஆசிட்களை சில்லறை விற்பனை கடைகளில் வைத்திருக்கக் கூடாது, அரசின் விதிமுறைகளை மீறி வைத்திருந்ததால் அந்த விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆசிட்டை விற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிட் விற்பனையில் அரசு விதித்துள்ள விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விற்பனையாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
மேலும் கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஆசிட் விற்பனை செய்யும் கடைகளில் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பெருநகர காவல் துறையின் இணை ஆணையர்கள் ஸ்ரீதர், சண்முகவேல், திருஞானம், கே.சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.