வாழப்பாடி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்!
வாழப்பாடி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக...
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று(ஜூன் 14) அதிகாலை சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்து, டாரஸ் லாரி மீது மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி தவித்த பேருந்து ஓட்டுநரை தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன், கோயம்புத்தூர் நோக்கி அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிகாலை 2 மணி அளவில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே மத்தூர் புறவழிச் சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக, அரியலூரில் இருந்து வாழப்பாடி அருகிலுள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு மூலப் பொருள்கள் ஏற்றி சென்ற டாரஸ் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சீனிவாசன்(51) மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் சேலம் அன்னதானப்பட்டி ஹவுசிங் போர்டு சேதுராமன் (54), வானாபுரம் கனிமொழி (21), திருபுவனை முகுந்தன்(26), உதயகுமார் (39), புதுச்சேரி ஹரிகரன் (40), ராமச்சந்திரன் (70), விழுப்புரம் வானூர் சரவணன் (46), குட்டியம்மா (43), அக்ஷயா ஸ்ரீ (21,) விழுப்புரம் வானூர் துளசி (18), உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசனை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.