ஆட்டோ கட்டணம்: முத்தரப்பு கமிட்டி அமைக்க கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான முத்தரப்பு கமிட்டியை தமிழக அரசு அமைக்க வேண்டும் என தமிழக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான முத்தரப்பு கமிட்டியை தமிழக அரசு அமைக்க வேண்டும் என தமிழக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பின் சென்னை மாவட்டத் தலைவர் பால் பர்னபாஸ் பேசியது:
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி திருத்தியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார்.
Advertisement
புதிய கட்டண விகிதம் நுகர்வோர் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
தற்போது தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். இதற்கென தமிழக அரசு முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும். சென்னையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.