முகப்பு
சென்னை

தீபாவளி பண்டிகை: அக்டோபர் 31-ஆம் தேதிக்கு 20 நிமிடங்களில் முடிவடைந்த ரயில் முன்பதிவு

தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு அக்டோபர் 31-ஆம் செல்வதற்கானரயில் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை 20 நிமிடங்களில் முடிவடைந்ததாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 5:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு அக்டோபர் 31-ஆம் செல்வதற்கானரயில் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை 20 நிமிடங்களில் முடிவடைந்ததாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கியமாக தென் மாவட்டங்களுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி இரவு மற்றும் பகல் நேரத்தில் செல்லும் அனைத்து ரயில்களின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவு இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடந்ததது. அதிகாலையிலேயே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்காக சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், பரங்கிமலை, தாம்பரம், மயிலாப்பூர் உள்பட அனைத்து ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் வரிசையில் நின்றிருந்தனர்.

Advertisement

காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. அடுத்த 20 நிமிடங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரவு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்தது. இதனால் பலர் வேறுவழியின்றி, பகல் நேர ரயில்களில் முன்பதிவு செய்தனர். தற்போதைய நிலவரப்படி, தென்மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் செல்லும் பயணிகளில் 100க்கு மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு செல்லும் சேரன் , நீலகிரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கவுன்ட்டர் திறந்த 15 நிமிடங்களில் முன்பதிவு முடிந்ததால் வரிசையில் காத்துநின்ற ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

முன்பதிவில் இன்று.... நவம்பர்-1ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்பவர்கள் திங்கள்கிழமை முன்பதிவு செய்துகொள்ளலாம். முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் வசதிக்காக திங்கள்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கவுன்ட்டர் திறந்திருக்கும்.

விநாயகர் சதுர்த்தி கூட்ட நெரிசல்: ரயில்களில் முன்பதிவு நிறுத்தம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு தென்மாவட்ட ரயில்களில் இடமில்லாததால் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாப்படுகிறது. அன்றையதினம் அரசு விடுமுறையாகும். மேலும் 7, 8 ஆகிய (சனி, ஞாயிறு) இரு நாள்களும் அரசு விடுமுறை நாள்களாக இருப்பதால் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. இதனால் இந்த விடுமுறை நாள்களுக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்துவிட்டன. காத்திருப்போர் பட்டியலும் 300-ஐ தொட்டுள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டிவிட்டது.

இதனால் அந்த ரயில்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 300-க்கும் மேலாக முன்பதிவு டிக்கெட் வழங்க இயலாது. காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதோடு டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டதால் வெளியூர் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ரயில்கள் மட்டுமன்றி அரசு விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்களிலும் தென் மாவட்டங்களுக்கு செல்ல இடமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.