மின்சாரம் பாய்ந்து தந்தை-மகள் உள்பட 4 பேர் சாவு
மின்சாரம் பாய்ந்து தந்தை - மகள் உள்பட 4 பேர், உயிரிழந்தனர். அழகுநிலையம் திறப்பு விழாவின்போது, கடையின் விளம்பரப் பலகையை, சற்று திருப்பி வைத்தபோது, அப்பலகையில் மின் கம்பி உரசியதால் இந்த பரிதாபம் நேரிட்டது.
மின்சாரம் பாய்ந்து தந்தை - மகள் உள்பட 4 பேர், உயிரிழந்தனர். அழகுநிலையம் திறப்பு விழாவின்போது, கடையின் விளம்பரப் பலகையை, சற்று திருப்பி வைத்தபோது, அப்பலகையில் மின் கம்பி உரசியதால் இந்த பரிதாபம் நேரிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் திலகராஜன் (52). மருத்துவ ஆய்வக உதவியாளர். இவரது மனைவி நையானா (41). இவர்களுக்கு சிப்ரோஸ் (22) என்ற மகனும், சினேகா (19) என்ற மகளும் உள்ளனர்.
நையானா, விநாயகபுரத்தில், கடப்பா சாலையில் ஒரு தனியார் கட்டடத்தின் முதல் தளத்தில் அழகுநிலையம் தொடங்கினார். இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கடைக்கான டிஜிட்டல் விளம்பரப் பலகை, முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்தது.ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் புதிய கடைக்கு பூஜைகள் நடத்த, அப்பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (48) என்பவர் அங்கு வந்தார். பூஜை நடைபெற்று கொண்டிருந்தபோது, வாஸ்து சரியில்லை எனக் கூறி கடையின் பெயர்ப் பலகையை சற்று திருப்பி வைக்கும்படி திலகராஜனிடம், ராமமூர்த்தி கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து திலகராஜன், அவரது மகள் சினேகா, திலகராஜனின் நண்பர் நவீன்சந்திரன் (52), ராமமூர்த்தி ஆகியோர் சேர்ந்து பெயர்ப்பலகையை திருப்பியுள்ளனர்.
Advertisement
அப்போது பெயர் பலகையின் இரும்புப் பகுதி, அருகில் இருந்த சுமார் 1100 கிலோவாட் மின்னழுத்தம் கொண்ட மின்கம்பியில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து 4 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த புழல் காவல் ஆய்வாளர் பாபு ராஜேந்திரபோஸ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று இறந்தவர்களின் உடல்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.