முகப்பு
சென்னை

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தமிழகத்திலும் சட்டம் கொண்டுவர வேண்டும்

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று பேராசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

Updated On : 2 செப்டம்பர் 2013, 3:22 am IST
பகிர்:

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று பேராசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

மகாராஷ்டிரத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய டாக்டர் நரேந்திர தபோல்கரின் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

பில்லி சூனியம், மாந்திரீகம், போலி சாமியார்களுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டம் இந்தியா முழுவதுக்கும் கொண்டுவரப்பட வேண்டும். இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களையும், தூண்டியவர்களையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் ராமானுஜம் பேசியது:

அறிவியலைப் பரப்புவதன் மூலம் சமூக மாற்றத்தையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் மக்களிடம் ஏற்படுத்த அறிவியல் இயக்கங்கள் பாடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கரின் படுகொலை நாம் அனைவரும் வருந்தக்கூடிய, வெட்கப்படக்கூடிய நிகழ்வாக உள்ளது.

அவர் கொண்டுவர முயற்சி செய்த மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம், போலிச் சாமியார்களுக்கு எதிரானது என்பதால்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது.

தபோல்கரின் மறைவுக்குப் பிறகு மகாராஷ்டிரத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதேபோன்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

அதேநேரத்தில், இந்தச் சட்டம் பல்லில்லாத ஒன்றாக இருக்கக் கூடாது. மக்களின் பல நம்பிக்கைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும், அரசியலுக்குப் பயன்படுத்தும் சக்திகளை எதிர்க்கக் கூடிய ஒன்றாக சட்டம் இருக்க

வேண்டும்.

மூடநம்பிக்கைகளைப் பற்றி விவாதிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும். கடவுள் நம்பிக்கை குறித்துக்கூட இப்போது வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க முடியாத சூழல் உள்ளது.

குழந்தைகளுக்கு சீம்பால் கொடுப்பது கெடுதல் விளைவிக்கும் என்ற மூடநம்பிக்கை

இருந்தது.

ஆனால், ஆய்வுகளில் அந்த பால்தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குகிறது எனத் தெரியவந்தது. இந்த மூடநம்பிக்கையை அறிவியல் இயக்கங்கள்தான் களைந்தன.

தபோல்கரின் படுகொலை நம்மை மீண்டும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அர்ப்பணித்துக்கொள்ளும் உணர்வைத் தர வேண்டும் என்றார் அவர்.

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் கல்பனா: அரசியல் சாசனத்தின் கோட்பாட்டில் உள்ளவற்றை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் பாடுபட்டார். சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கை அவரது உயிரைப் பறித்திருக்கிறது.

இந்த நாட்டில் விஞ்ஞானத்துக்காக, விஞ்ஞானப் பூர்வ சிந்தனைக்காக, பழமைவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதை அவரது படுகொலை சம்பவம் நமக்கு உணர்த்துகிறது என்றார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி உதயன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.