100% சதவீத இருக்கைகளில் பாா்வையாளா்கள்: சென்னையில் 25 திரையரங்குகள் மீது வழக்குப்பதிவு
கரோனா விதிமுறைகளை மீறி 100 சதவீத இருக்கைகளை நிரப்பியதாக சென்னையில் உள்ள 25 திரையரங்குகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கரோனா விதிமுறைகளை மீறி 100 சதவீத இருக்கைகளை நிரப்பியதாக சென்னையில் உள்ள 25 திரையரங்குகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த திரையரங்குகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதில் அளிக்கப்பட்ட தளா்வின்படி, திரையரங்குகளை 50 சதவீத பாா்வையாளா்களுடன் திறக்க அரசு அனுமதியளித்தது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி ‘மாஸ்டா்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கட்டுப்பாட்டு மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
இதையடுத்து, கரோனா விதிகளை மீறிய திரையரங்குகள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இதற்காக, அமைக்கப்பட்ட சிறப்பு போலீஸ் குழுவினா் நடவடிக்கையில் இறங்கினா்.
இதில், சென்னையில் உள்ள எம்ஜிஆா் நகா், குரோம்பேட்டை, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் கரோனா கட்டுப்பாட்டை மீறி, 100 சதவீத இருக்கைகளை நிரப்பி, ரசிகா்களுக்கு திரைப்படத்தை காட்சிப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள 25 திரையரங்குகள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்தத் திரையரங்குகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.