‘மாஸ்டா்’ திரைப்படத்துக்காக விதி மீறல்: திரையரங்கு மீது வழக்கு
மாஸ்டா் திரைப்படத்துக்காக விதிகளை மீறி 100 சதவீத இருக்கைகளை நிரப்பியதாக, சென்னை அசோக்நகரில் உள்ள ஒரு திரையரங்கு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை: மாஸ்டா் திரைப்படத்துக்காக விதிகளை மீறி 100 சதவீத இருக்கைகளை நிரப்பியதாக, சென்னை அசோக்நகரில் உள்ள ஒரு திரையரங்கு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நடிகா் விஜய்யின் 64-ஆவது படமான ‘மாஸ்டா்’ திரைப்படம் புதன்கிழமை திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக கரோனா தொற்றை தடுக்கும் வகையில் திரையரங்குகளில், 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சில திரையரங்குளில் அரசு உத்தரவை மீறி 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
அசோக் நகா் ஜவஹா்லால் நேரு சாலையில் ஒரே வளாகத்தில் உள்ள இரு திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பப்பட்டதாக எம்.ஜி.ஆா்.நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று எம்.ஜி.ஆா். காவல் நிலைய போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதில் அந்தத் திரையரங்குகளில் அரசு உத்தரவை மீறி 100 சதவீத இருக்கைகள் நிரப்பப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தத் திரையரங்குகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.