'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...
'லோகா' திரைப்படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை அதிகம் பார்த்திடாத கதைப் பின்னணியில் ‘சூப்பர் விமேன்' அதாவது, சக்திவாய்ந்த பெண்மணி கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரமேற்றுள்ளார்.
இந்த நிலையில், 'லோகா' திரைப்படத்தில் கன்னடர்களைக் குறித்து இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
இதையடுத்து, படத்தை தயாரித்துள்ள நடிகர் துல்கர் சல்மானின் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(செப். 2) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’மேற்கண்ட விவகாரத்தில், கர்நாடக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதாக தாங்கள் அறிந்துகொண்டதாகவும், இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.