முகப்பு
செய்திகள்

தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குநர்! ஏன் எதற்கு?

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய  படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் படம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய  படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் படம் மெர்குரி. இந்தப் படம் வசனமே இல்லாமல் சைலண்ட் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரதீப் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஏப்ரல் 13-ம் தேதி மெர்குரி வெளியாகும் என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தார். தமிழ்த் திரையுலகில் அமலில் இருக்கும் வேலை நிறுத்தத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெளனப் படம் என்பதால் ஏப்ரல் 13 அன்று வெளியாவது உறுதி என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். மெர்குரி, மெளனப் படம் என்பதாலும் ஏப்ரல் 13 அன்று உலகம் முழுக்க வெளியாகவுள்ளதாலும் இந்தப் படத்துக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி, சினிமாவை நம்பியுள்ள என் நூற்றுக்கணக்கான படக்குழுவினருக்காகவும் பட வெளியீட்டுக்கான சூழலில் உள்ளோம் என்று ஒரு அறிக்கையில் கூறியிருந்தார். அதன்பின் படத்தின் டீஸர், டிரெய்லர் ஆகியவை கடந்த வாரம் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து எந்த மொழியையும் சாராத மெர்குரி திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழகம் தவிர பிற மாநிலங்கள் அனைத்திலும் திட்டமிட்டபடி வெளியாகியிருக்கிறது. ஸ்ட்ரைக் காரணமாக தமிழ்நாட்டில் வெளியாகவில்லை.

இதற்கு கார்த்திக் சுப்பராஜ் தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தனது ட்விட்டரில் அவர் கூறியிருப்பது, ‘எனது சொந்த மாநிலமான தமிழகம் தவிர உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் மெர்குரி படம் வெளியாகியுள்ளது. படத்துக்கு கிடைத்து வரும் அதிகப்படியான வரவேற்பால் சந்தோஷமாக உள்ளேன். அதே சமயம் என்னை வெளி உலகுக்கு அடையாளப்படுத்திய தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. தவிர்க்க முடியாத சில காரணத்தால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடியவில்லை. எனவே தொழிலாளர்களுக்கு நலம் பயக்கும் விதமாக சாதக அம்சங்களுடன், தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக் முடிந்த பின்னர் தமிழில் மெர்குரி ரிலீசாகும் என்று நம்புகிறேன்.’ என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.