மன்மதன் பட விவகாரம் தொடர்பாக டி.ஆர். மீது வழக்கு தொடர்வேன்: தயாரிப்பாளர் தேனப்பன்
என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் கதைகள் திரையுலகம் அறிந்ததே...
மன்மதன் பட விவகாரம் தொடர்பாக டி.ஆர். மீது வழக்கு தொடர்வேன் என தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்மதன் திரைப்பட டப்பிங் உரிமையை விற்க விடாமல் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனிடம் திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று புகார் அளித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எனது மகன் சிம்பு மன்மதன் திரைப்படத்துக்கு கதை எழுதி, இயக்கி நடித்தார். அதன்,தெலுங்கு டப்பிங் உரிமையை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் விற்பனை செய்தோம். இந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியிடவும் உரிமை பெற்றுள்ளோம். 2003ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இந்தியில் எடுக்க வேண்டும், அதன் மூலம் சிம்புவை இந்தியில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். ஆனால் தற்போது சிம்பு தமிழ் திரைப்படங்களில் பிசியாகி விட்டார். இதனால், டப்பிங் உரிமையை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில் விற்க முற்பட்டபோது திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் வேண்டும் என்றே மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படத்தை விற்க விடமாட்டேன் என மிரட்டுகிறார். இந்த இரண்டு படத்தின் உரிமையை அவர்கள் வாங்கி இருப்பதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார். தயாரிப்பாளர் தேனப்பன், எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய் குமார் லால்வானி ஆகிய 2 பேரும் மன்மதன், வல்லவன் திரைப்படங்களின் டப்பிங் உரிமை தங்களிடம் உள்ளதாக உண்மைக்குப் புறம்பான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Advertisement
Advertisement
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் அறிக்கை வெளியிட்டிருப்பதாவது: சிலம்பரசனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் 2006 அக்டோபர் 13-ல் வெளியான 'வல்லவன்' படத்தின் ஹிந்தி மற்றும் வட இந்திய உரிமை, என் நிறுவனத்திற்குச் சொந்தமானது. அந்த உரிமையை 2016 நவம்பர் 3-ல் ஜெமினி லேபின் கடிதம் மூலமாக எஸ்என் மீடியா என்கிற நிறுவனத்துக்கு விற்பனை செய்தேன். ஆனால் வல்லவன் படத்தின் ஹிந்தி டப்பிங் மற்றும் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை தன்னிடம் உள்ளதாக டி.ஆர். கூறியுள்ளதாக அறிகிறேன். நான் வல்லவன் படத்தைத் தயாரித்து, அதில் சிலம்பரசனை இயக்குநராக அறிமுகப்படுத்தினேன். அவருடைய ஒத்துழைப்பு இல்லாமல் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றளவும் மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் கதைகள் திரையுலகம் அறிந்ததே. வல்லவன் படத்தின் தயாரிப்பாளரான என்னையும் என்னுடைய 35 வருட திரையுலக அனுபவத்தையும் கேலிக்கூத்தாகும் வகையில் என் மேல் அபாண்டமாகப் பழி சுமத்தும் வகையில் பேசிய டி.ஆரை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் என் பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக டி.ஆர். மீது நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பாகக் காவல் ஆணையரைச் சந்தித்துப் புகார் அளிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.