முகப்பு
செய்திகள்

சினிமா சிலருக்குப் பொங்கல் போடும், சிலருக்குப் பிரியாணி போடும்: கமல் பேச்சு!

சீயான் விக்ரமாக அவர் ஆவதற்கு உண்டான தாமதம் எனக்குப் பிடிக்கவேயில்லை. இன்னும் விரைவாக அந்த இடத்துக்கு...

Updated On : 4 ஜூலை 2019, 3:15 pm IST
பகிர்:

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். 

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார். அபி ஹாசன், லேனா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். 

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பேசியதாவது: 

Advertisement

என்னிடம் ஒரு படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கிறார், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான உள்ள ஒருவர். அவரிடம் கேட்டேன், யாருய்யா இது என்றேன். பிடிச்சிருக்கா என்றார். ரொம்ப தன்னம்பிக்கை கொண்டவர். வருவான்யா அந்த ஆளு என்றேன். அந்தப் படம் மீரா. எனக்கு அவர் யாருன்னே தெரியாது. கேமராவை இடதுப் பக்கமாக, வலதுப் பக்கமாக, லென்ஸுல நடுவில் பார்க்க ஒரு தைரியம் வேண்டும். அது பயிற்சியில் வராது. அது உள்ளே இருக்கவேண்டும். விக்ரமிடம் அது இருந்தது. 

சினிமா அப்படித்தான். சிலருக்கு பொங்கல் போடும், இன்னொருத்தருக்கு பிரியாணி போடும். ஒருத்தருக்குப் பட்டினி போட்டுவிடும். சீயான் விக்ரமாக அவர் ஆவதற்கு உண்டான தாமதம் எனக்குப் பிடிக்கவேயில்லை. இன்னும் விரைவாக அந்த இடத்துக்கு வந்திருக்கவேண்டும். சேது பலவருடங்களுக்கு முன்பே வரவில்லையே என்கிற வருத்தம் எனக்கிருந்தது. இது கமல் என்கிற கலைஞன், இயக்குநர், எழுத்தாளர் படும் வருத்தம். 

கடாரம் கொண்டேன் படத்தைப் பார்த்தேன். நான் இளைஞனாக இருந்தபோது கூட சக நடிகனின் நடிப்பைப் பாராட்டாமல் இருக்கமாட்டேன். பாராட்ட வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டால் நிச்சயம் பாராட்டுவேன். இல்லாவிட்டால் லொகேஷன் பற்றி விசாரித்துக் கதையைப் பற்றி பேசாமல் போனால் படம் பிடிக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் நல்ல படத்தைப் பார்த்தால் நான் ஏன் தயாரிக்கவில்லை என்று தோன்றும். கடாரம் கொண்டான் படத்தை ரசிகனாக ரசித்துப் பார்த்தேன். படத்தை விற்பதற்கான யுக்தியாக இதை எண்ணவேண்டாம். அது தானாக அமையும். இந்தப் படத்தை விக்ரமுக்காகப் பார்க்கவேண்டும். அவருக்கு ஸ்டைல் ரொம்ப ஜோராக வந்துள்ளது. 

இந்தப் படத்தின் செட்டுக்கு இரண்டுமுறைதான் வந்துள்ளேன். மற்றபடி எனக்கு ஒரு பதற்றமும் இல்லை. முக்கியக் காரணம் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா. பல பிரச்னைகளை அவர் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் அவருக்குத் தந்துள்ளேன். ஒரு அரசாங்கமே துரத்தும் அளவுக்குப் படம்  எடுப்போம் நாங்கள். அதையெல்லாம் பார்த்து எதையும் வென்றுவிடலாம் என்றொரு படக்குழு இப்படத்தில் பணிபுரிந்துள்ளது என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.