முகப்பு
செய்திகள்

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Updated On : 15 ஏப்ரல் 2024, 4:26 am IST
பகிர்:

மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு முறை சுட்டுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 307-ஆவது பிரிவின் (கொலை முயற்சி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

சல்மான் கான் வீட்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீஸார் கண்டெடுத்தனர். அது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் ஓட்டி வந்ததாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்துக்கு உள்ளூர் போலீஸார், குற்றப் பிரிவு காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சென்று தடயங்களைச் சேகரித்தனர். சல்மான் கான் வீட்டுக்கு அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை அவர்கள் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது அந்த வீட்டில் சல்மான் கான் இருந்தாரா என்பது குறித்து அவரது குடும்பத்தினரோ காவல் துறையோ ஏதும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சல்மான் கானுடன் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் பேசினார். சல்மான் கானுக்கு ஆதரவு தருவதாக முதல்வர் கூறினார். இது குறித்து முதல்வர் ஷிண்டே கூறுகையில் "துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது. நான் இது தொடர்பாக மும்பை காவல் துறை ஆணையருடனும் சல்மான் கானுடனும் பேசினேன். எங்கள் ஆதரவைத் தெரிவித்தேன். எந்த ஒருவரும் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்வதை எனது அரசு அனுமதிக்காது என்று மக்களுக்கு உறுதி அளித்தேன்' என்றார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், சல்மான் கானை மிரட்டும் வகையிலான இ-மெயில் அவரது அலுவலகத்துக்கு வந்தது. இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், மற்றொரு நபர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு

செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments