மான் வேட்டை கதை! காலா ஹிரன் படத்தை எதிர்த்து சல்மான் கான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
காலா ஹிரன் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து நடிகர் சல்மான் கான் மனு தாக்கல்...
பாலிவுட் நடிகர் சல்மான் கான் “காலா ஹிரன்: தி பேட்டில் ஃபார் லெகசி” எனும் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குநர் பரத் ஸ்ரீநாத் இயக்கத்தில், ஜானி ஃபையர்ஃபாக்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய பாலிவுட் படம் “காலா ஹிரன்: தி பேட்டில் ஃபார் லெகசி”.
இந்தப் படம், கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கான் அரிய வகை மான்களை வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கையும், அதனால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காலா ஹிரன்: தி பேட்டில் ஃபார் லெகசி திரைப்படம் தனது தனிப்பட்ட உரிமைகளை மீறுவதுடன், தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டு சல்மான் கான் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கெனவே, இந்தப் படத்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்துமாறு கூறி நடிகர் சல்மான் கான் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், அதற்குப் படக்குழு உரிய பதிலளிக்காததால் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, 1998 ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிளாக் பக் எனும் அரிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, பிஷ்னோய் சமூகத்தினர் நடிகர்கள் சல்மான் கான், சைஃப் அலி கான், சோனாலி பென்ரே, நீலம் மற்றும் தபு ஆகியோர் மீது புகார் அளித்தனர். மேலும், லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்டோரின் கும்பல்கள் சல்மான் கானுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.