ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும்..! ஆடுஜீவிதம் இயக்குநர் வருத்தம்!
ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கேரள அரசின் விருது கிடைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்றன.
கேரள அரசின் மாநில விருதுகள் சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்), சிறந்த இயக்குநர் - பிளெஸ்ஸிக்கும் கிடைத்தது.
இது குறித்து இயக்குநர் பிளெஸ்ஸி, “ரஹ்மானின் இசைதான் படத்துக்கு இதயம்போன்றது. படத்தின் கதை முழுவதையும் உள்ளார்ந்து தைத்திக்கும்படியான இசை. அற்புதமாக இசையமைத்திருப்பார். இந்த விருது கிடைக்காதது குறித்து ரஹ்மான் கவலைப்படப் போவதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆடுஜீவிதம் படத்தின் ஆன்மா ஏ.ஆர். ரஹ்மானின் இசைதான்” எனப் பேசினார்.
நடிகர் பிருத்விராஜ், “இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில், நேற்று (ஆக.16) பொன்னியின் செல்வன் -1 படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.