முகப்பு
செய்திகள்

பெரியாரை அவமரியாதை செய்ததா உதயநிதியின் நிறுவனம்?

ரெட் ஜெயண்ட் நிறுவனம், வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்காக பெரியாரை அவமாரியாதை செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:18 PM
பகிர்:

நடிகர் சந்தானம் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய விடியோவை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அந்த விடியோவில்,  “ஊருக்குள்ள சாமி இல்லன்னு சொல்லிட்டு இருந்த ராமசாமிதான நீ” என ஒருவர் கேட்கிறார். அதற்கு சந்தானம், “நான் அந்த ராமசாமி இல்லை” என பெரியாரைக் குறிப்பிடுவதுபோல் பதிவிட்டிருந்தார். 

இதனைக் கண்ட பலர், சந்தானத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்தவர் அப்பதிவை நீக்கினார். 

இதற்காக, பெரியார் ஆதரவாளர்கள் சந்தானத்தை விமர்சித்ததுடன் பெரியார் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் விடியோவாக எடுத்து வெளியிட்டனர். சந்தானம் இந்த விடியோவைப் பகிர்ந்தது வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் புரோமோஷனுக்காகத்தான் என அவருடைய ரசிகர்கள் ஆதரவுக் குரல் கொடுத்தனர்.

ஆனால், ஒரு திரைப்படத்திற்காக பெரியாரை அவமரியாதை செய்வது எந்த விதத்திலும் சரியல்ல என சந்தானத்துக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. குறிப்பாக, திமுகவினர் பலரும் சந்தானத்தைத் திட்டி எழுதியதுடன் அவர் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். 

சுவாரஸ்யமாக, இப்படத்தின் வெளியீட்டு உரிமையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே கைப்பற்றியிருக்கிறது. சந்தானத்தின் பதிவால் ஆத்திரமடைந்தவர்கள், ரெட் ஜெயண்டின் எக்ஸ் பக்கத்தைப் பார்த்தபோது அங்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. 

அதே வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்காக ரெட் ஜெயண்ட் நிறுவனம், “இவன் சாமியே இல்லைன்னு சொல்ற ராமசாமி இல்லை” எனக் குறிப்பிட்டு டிரைலர் விடியோவை இணைத்துள்ளனர். இதனால், தன் வியாபாரத்திற்காக கொள்கைகளை மதிக்காமல் பெரியாரையே உதயநிதி ஸ்டாலின் அவமானப்படுத்துகிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.  

சந்தானத்தின் புதிய திரைப்படமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பிப்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →