நடிகை பார்வதி திருவோத்து மஞ்சு வாரியர் குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.
நடிகை பார்வதி திருவோத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கிக்கொண்டவர். கதையம்சமுள்ள படங்களில் நடிப்பதுடன் அரசியல், இலக்கியம் ரீதியிலான உரையாடல்களில் பங்கேற்று தன் கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பவரும்கூட.
இவர் மலையாள சினிமாவில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகிறார்.
இதையும் படிக்க: பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பெரிய சர்ச்சையைக் கிளப்பியதும் நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், மஞ்சு வாரியர், விது வின்செண்ட் ஆகியோர் சினிமா பெண்கள் நல அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அடுத்த சில நாள்களில் மஞ்சு வாரியரும், விது வின்சென்டும் அந்த அமைப்பிலிருந்து விலகினர்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பார்வதியிடம், “பெண்கள் நல அமைப்பிலிருந்து மஞ்சு வாரியரும், விது வின்சென்டும் ஏன் விலகினர்?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பார்வதி, “இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடமே கேட்க வேண்டியதுதானே? என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? உங்களால் அவர்களிடம் பேட்டி எடுக்க முடியாதா என்ன? கடினமாக உழைத்துக் கொண்டிருப்பவர்களிடம் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்பது எங்களை மரியாதை குறைவாக நடத்துவதுபோல் இருக்கிறது. உங்களை மட்டும் சொல்லவில்லை. மொத்த மீடியாக்களும் இதே கேள்வியை என்னிடம் மட்டுமே ஏன் கேட்கிறார்கள்? உங்களுக்கு உண்மை தேவையென்றால் சம்பந்தப்பட்ட நபரிடமே கேட்கலாமே. அதைவிடுத்து, திரும்ப திரும்ப என்னிடம் கேட்பது சரியானது அல்ல.” என காட்டமாக பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.