முகப்பு
செய்திகள்

'நம்பவே முடியவில்லை...’ இன்ப அதிர்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!

ராஜமௌலி பாராட்டால் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு உற்சாகமடைந்துள்ளது...

Updated On : 20 மே, 2025 at 6:06 AM
பகிர்:

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் கூடுதலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதுவரை புக் மை ஷோ (book my show) ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே 12 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் பல திரைகளில் இப்போதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் ராஜமௌலி, ”டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையில் தொடக்கம் முதல் முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் சிறப்பாக எழுதி, இயக்கியுள்ளார். அண்மை ஆண்டுகளில் மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை அளித்ததற்கு நன்றி. இப்படத்தை தவறாமல் பாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த அபிஷன் ஜீவிந், “என்னால் நம்பவே முடியவில்லை. நான் என் கண்களில் நட்சத்திரம் மின்ன அவருடைய திரைப்படங்களைப் பார்த்தவன். அவரே அழைத்துப் பேசுவார் என கனவிலும் நினைக்கவில்லை. ராஜமௌலி சார், நீங்கள் என் கனவை நனவாக்கியிருக்கிறீர்கள்” என உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →