மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது தொடர்பாக...
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் அக். 28 2023 வரை 1348 எபிசோடுகள் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டாலும், 6 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையை இந்தத் தொடர் பெற்றது.
Advertisement
சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் எடுக்கப்பட்டது.
இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதில் நடித்த பலருக்கும் விருதுகள் கிடைத்தன. இதனையடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் தந்தை - மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன், ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ் இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகத்தில் நடிகை நிரோஷா, வி.ஜே. தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகம் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் பாகம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 1 மணி நேரம் வரும் ஏப். 27 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.