வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை... த்ரிஷாவுக்கு பார்த்திபன் பதில்!
நடிகர் பார்த்திபனுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா...
நடிகர் பார்த்திபன் நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை த்ரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார்.
காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து விஜய் இப்படி செய்தது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபனிடம் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தைக் காட்டி, குந்தவையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டனர்.
அதற்கு பார்த்திபன், “குந்தவை வீட்டிற்குள்ளே குந்தவைத்தால் பல பிரச்னைகளைத் தீர்க்கலாம்” என்றார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதனைக் கண்டித்து த்ரிஷா, ‘ஒருவரிடம் மைக் இருந்தால் அவர் பேசுவது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள் தனத்தையே வெளிப்படுத்தும். யாரைத் தரம் தாழ்ந்து பேசுகிறீர்களோ அவரை விட, பேசுபவரையே அதிகமாக வெளிச்சம் போட்டுக்காட்டும்” எனக் காட்டமாக பதிவிட்டார்.
இந்த நிலையில், த்ரிஷாவுக்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் கலந்துகொண்ட நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது, இறுதியாக, த்ரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றதும் அரங்கிலிருந்தவர்கள் குந்தவை எனக் கூச்சலிடவும் நான், குந்தவை குந்தவைத்து அமைதியாக இருக்கலாம் என ஒரு வேகத்தில் சொல்லிவிட்டேன். கீழே இறங்கியதும் ரங்கராஜ் பாண்டே குந்தவையைத் தவிர்த்திருக்கலாம் என்றார்.
நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் த்ரிஷா குறித்து பேசியதை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன். ஆனால், யாரோ எடுத்த விடியோ வைரலாகிவிட்டது. வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்னைகள் பெரிதாவதை நான் என்றுமே விரும்பியதில்லை.
கல்லூரிகளுக்குப் பேச சென்றாலும் பெண் சுதந்திரம் குறித்தே பேசுகிறேன். ஆண் பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்றே கூறிவருகிறேன். பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் சக்தி” எனத் தெரிவித்துள்ளார்.