குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவராக நடிகை ரோஜா!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரோஜா பங்கேற்கவுள்ளது தொடர்பாக...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசனில் நடிகை ரோஜா நடுவராக பங்கேற்கிறார். இதற்கான முன்னோட்டக் காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், விரைவில் 7-வது சீசன் தொடங்கப்படவுள்ளது.
சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்ஷன், இந்த முறையும் தொகுத்து வழங்கவுள்ளார். இவருடன் இணைந்து கடந்த முறை குக்காக இருந்த ஜோயாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
இம்முறையும் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன், கௌசிக் சங்கர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.
இவர்களுடன் நடிகை ரோஜாவும் நடுவராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். நடிகை ரோஜாவின் வருகை இந்தப் புதிய சீசனில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சின்ன திரையில் தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சில் ஒளிபரப்பான ஜீன்ஸ் நிகழ்ச்சியை ரோஜா தொகுத்து வழங்கினார். அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு பா நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரோஜாவின் வருகையால், இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி புள்ளிகள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முந்தைய சீசன்களில் பங்கேற்ற கோமாளிகளும்(சமையல் தெரியதாவர்), புதிதாக சில கோமாளிகளும் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளனர்.
முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற சுனிதா, ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் இந்த சீசனிலும் பங்கேற்கவுள்ளனர்.
குக் வித் கோமாளி - 7 சீசன் தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.