ஆர்.பி.சௌத்ரிக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!
மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் 100-வது படத்தில் நடிக்கவிருந்ததாக ரஜினிகாந்த் பேச்சு
மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் 100-வது படத்தில் நடிக்கவிருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி (72), ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியான நிலையில், சென்னை தியாகராய நகரில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடனான பேட்டியில் ரஜினிகாந்த் பேசியதாவது, "ஆர்.பி.சௌத்ரியின் படங்களில் நான் நடித்ததில்லை. இருந்தாலும்கூட, அவர் எனக்கு நெருங்கிய நண்பர்.
Advertisement
சமீபத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்குக்கூட அவர் வந்திருந்தார். அப்போது, அவர் 99 படங்களை எடுத்து விட்டதாகவும், 100-வது படத்தை எடுத்துவிட்டு ஓய்வு பெறவிருப்பதாகவும் கூறினார். அவருடைய 100-வது படத்தில் நான் நடிக்க, 3 கதைகள் வைத்திருப்பதாகவும் என்னைக் கேட்டார். அவரது படத்தில் நடிப்பதாக நானும் 100 சதவிகிதம் உறுதியளித்தேன்.
இதனிடையே, நிறைய இயக்குநர்களை ஆர்.பி.சௌத்ரி உருவாக்கியிருப்பதாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறினார். மேலும், இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து ஆர்.பி.சௌத்ரிக்கு ஒரு விழா நடத்த வேண்டும் என்றும் கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.
எத்தனையோ இயக்குநர்கள், டெக்னீசியன்களை ஆர்.பி.சௌத்ரி உருவாக்கியிருக்கிறார்; திரையுலகைக் காப்பாற்றியவர்.
99 படங்களை எடுத்த அவரின் எந்தப் படத்திலும் பெரிதளவில் பிரச்னை ஏதும் இருக்காது. பிரச்னை வந்தாலும்கூட, யாரால் பிரச்னை உருவானதோ அவரின் வீட்டுக்கு நேரில் சென்று, பிரச்னையை சுமூகமாக தீர்த்து விடுவார்.
அவர் எப்போதும் புத்துணர்ச்சியோடும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். அதன் காரணம் என்னவென்று கேட்டால், ரிஸ்க் எதுவும் எடுக்காததுதான் காரணம் என்று சொல்வார். அவர் ஓர் அருமையான ஆத்மா, அருமையான தயாரிப்பாளர். அவர் அகால மரணமடைந்தது வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்தார்.
தமிழ், மலையாளம், தெலங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி, சொந்த ஊரான உதய்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜோத்பூர் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் சாலையோரம் இருந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆர்.பி. சௌத்ரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (மே 5) உயிரிழந்தார்.
ஆர்.பி.சௌத்ரி மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.